யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்று திங்கட்கிழமை 7 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதற்கமைய செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து இதுவரை மொத்தமாக 72 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்ட மனிதப் புதைகுழிகளில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இரண்டாம் கட்டப் பணிகளுக்காக 45 நாள்கள் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் 15 நாள்கள் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கடந்த 10 ஆம் திகதியுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு 11 நாள்களின் பின்னர் இன்று 16 ஆவது நாளாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது இரண்டு மனிதப் புதைகுழிகளில் இருந்தும் 7 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை நாளை செவ்வாய்க்கிழமை அகழ்ந்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் இதுவரை யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய, இந்த விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் ஒப்படைக்கபட்டுள்ள நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அகழ்வு இடம்பெறும் இடத்தில் பிரச்சன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.



Leave a comment