யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பில் இன்று பெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பேரணியாகச் செல்ல முயன்ற வேளை பொலிஸார் தடுத்து நிறுத்தியதால் குழப்ப நிலை ஏற்பட்டது.
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் நீதிக்கான மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் பெருமளவானவாகள் கலந்துகொண்டிருந்தனர்.
“செம்மணி உட்பட அனைத்து புதைகுழிகளுக்குமான நீதிக்கான குரலைப் பலப்படுத்துவோம். ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதை உலகுக்குக் கூறுவோம். சர்வதேச தரத்திலான அகழ்வுப் பணி மட்டுமல்ல நீதிக்கான சர்வதேசத்தின் தலையீட்டையும், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படவும் ஓங்கிக் குரல் எழுப்புவோம்.” – என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள், “புத்த தேசமா? புதைகுழிகள் தேசமா? செம்மணியில் எலும்புகளாக எம்மவர்கள்… சர்வதேசமே தமிழர்களை ஏமாற்றாதே!, போர்க் குற்றத்தின் சாட்சி செம்மணி, வடக்கு, கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து’ போன்ற பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
போராட்டக்காரர்கள் முன்னோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற வேளை பொலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்
போராட்டக்காரர்கள் தங்களை முன்னோக்கிச் செல்வதற்கு அனுமதிக்குமாறு பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்த போதிலும் பொலிஸார் அதற்கு அனுமதிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் முன்னோக்கி நகர முற்பட்ட வேளை பொலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் குழப்ப நிலை ஏற்பட்டது.





Leave a comment