யாழ். தையிட்டியில் சர்ச்சைக்குரிய சட்ட விரோத விகாரை வளாகத்தில் மற்றுமொரு கட்டடம் கட்ட ஏற்பாடு இடம்பெறுகின்றது என்றும், அந்த இடத்தை யாழ். மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபன் மற்றும் அமைச்சர் இ.சந்திரசேகர் ஆகியோர் பார்வையிட்டனர் என்றும் கூறப்படுகின்றது.
தையிட்டி சட்டவிரோத வளாகத்தில் மற்றுமோர் அத்துமீறிய கட்டடம் அமைக்கப்படுவதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தனின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து சக உறுப்பினர்கள் சகிதம் சம்பவ இடத்துக்குத் தவிசாளர் நேற்று வியாழக்கிழமை சென்றிருந்தார்.
பிரதேச சபையின் தவிசாளர் சென்ற சமயம் யாழ். மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபன் மற்றும் அமைச்சர் இ.சந்திரசேகர் ஆகியோர் அந்தப் பகுதியில் நிற்கின்றமை அவதானிக்கப்பட்டது என்று வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.
இந்தச் சட்டவிரோதக் கட்டடம் தனியாரின் காணிக்குள் வருவதனால் அந்த நிலத்தின் உரிமையாளர் ஊடாக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் யாழ். மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, தையிட்டி விகாரை விடுவிப்புத் தொடர்பில் பௌத்த பிக்குவுடன் கலந்துரையாடுவதற்காகவே தாங்கள் அங்கு சென்றிருந்தனர் என்று அவர் பதிலளித்தார்.


Leave a comment