உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றபோது அப்போதைய அரசாங்கத்தில் மூன்றாவது முக்கிய நபராக இருந்த சஜித் பிரேமதாஸ, பொலிஸ் துறைக்கு பொறுப்பாக அப்போதிருந்த ரஞ்சித் மத்தும பண்டார தொடர்பில் கூற வேண்டிய இரகசியங்கள் பல உள்ளன – என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட குழுவினர் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்து அது தொடர்பில் விவாதிக்கப்படுமானால் அது எமக்கு மிக்க மகிழ்ச்சியாகும்.
நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்தவர்கள் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டியது பாராளுமன்ற சம்பிரதாயமாகும். அவ்வாறு சமர்ப்பித்தால் அது குறித்த விவாதத்தின்போது தெரிவிப்பதற்கு பல விடயங்கள் எம் வசம் உள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இதற்கு முன்னர் கூறியவற்றை விட மேலும் பல தகவல்கள் எம்மிடமுள்ளன.
விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. எவ்வாறிருப்பினும், பிரதியமைச்சருக்கு எதிராக இவ்வாறான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை முன்வைக்க முடியுமா இல்லையா என்பதை எதிர்க்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். அது
எமது பிரச்னையல்ல. பிரித்தானிய பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு அமையவோ அல்லது
இலங்கையின் பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு அமையவோ நம்பிக்கையில்லா பிரேரரணையை எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்தால், அது தொடர்பான விவாதத்தில் மிகவும் மகிழ்ச்சியாக நாம் பங்கேற்போம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றபோது அப்போதைய அரசாங்கத்தில் மூன்றாவது முக்கிய நபராக இருந்த சஜித் பிரேமதாஸ, அப்போதைய பொலிஸ் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தொடர்பில் கூற வேண்டிய இரகசியங்கள் பல உள்ளன.
அவற்றை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு ஒன்றை எதிர்க்கட்சிகள் உருவாக்கிக் கொடுக்குமெனில், அதனை நாம் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.
எனவே, அனைவரும் இணைந்து நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பியுங்கள் என்று எதிர்க்கட்சிகளை கேட்டுக்கொள்கிறோம் – என்றார்.
Leave a comment